லெனின் வாழ்வும் – சிந்தனையும்!

மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன.  இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனார் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!
இந்த நூலை படித்து முடித்ததோடு, எனக்கு ஏற்பட்ட உணர்வு, தோழர் அருணன் இந்த நூலை எழுதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக எழுதவில்லை, சம்பிரதாய பூர்வமாக எழுதவில்லை. உணர்வு பூர்வமாக உத்வேகத்தால், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அக்கறையோடு, பொறுப்போடு எழுதியுள்ளார் என்றே தோன்றியது.
லெனினை மாபெரும் சிந்தனையாளர், புரட்சியாளர்! – அவரின் வாழ்க்கை பற்றி எழுதுகிறபோது, அது வெறும் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் இருந்திடாது, அவர் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளோடு, அவரின் தத்துவார்த்த கருத்துக்களோடு பின்னிப் பிணைத்துதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வரைய முடியும். அந்த வாழ்க்கையில் ஓர் ஆய்வாளராக அருணன் தன் எழுத்துப் பணியை நேர்மையோடு செய்து முடித்திருக்கிறார். லெனின் வாழ்க்கைப் பற்றி – அவரின் வீரம், சாகசம், அறிவுக் கூர்மை, சிரமங்கள், நெருக்கடிகள், துன்பத் துயரங்கள் – இவைகளைப் பற்றியெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு எழுதிய அருணன் லெனின் கூறிய, எழுதிய பல அரசியல் கருத்துக்களை, தத்துவார்த்தப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டியதோடு, வாசகர்கள் அதை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு, அந்தக் கருத்துக்களை உள்வாங்கி, தன் மொழியில் வியாக்கியானம் செய்து விளக்கியிருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது.
ஓர் உதாரணம் ரஷ்ய இளம் கம்யூனிஸ்டு கழகத்தின் மூன்றாவது மாநாடு 1920 அக்டோபர் 2ல் துவங்கியது. அந்த மாநாட்டில் தோழர். லெனின் இளைஞர்களிடம் பேசுகிறார். மனித குலம் சேகரித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தை எல்லாம் ஜீரணிக்காமல் ஒருவர் கம்யூனிஸ்டாகி விடலாம் என நினைப்பது மிகப் பெரும் தவறாகும். கம்யூனிச கோஷங்களையும், கம்யூனிச விஞ்ஞானத்தின் முடிவுகளையும் பற்றி மட்டும் அறிவது போதுமானது. கம்யூனிசத்தை தந்த அறிவு மூலத் தொகுப்பை அறிய வேண்டிதில்லை என நினைப்பது தவறாகும். மனித குல அறிவுத் தொகுப்பிலிருந்தே கம்யூனிசம் பிறக்கிறது என்பதற்கு மார்க்சியமே நல்ல உதாரணம் ஆகும்.
மார்க்சின் போதனைகள் ஏன் கோடிக்கணக்கான வாலிபர்களின் இதயங்களையும், மனங்களையும் வென்றிருக்கிறது என்று கேட்டால் உங்களுக்கான விடை இதுதான்:-
முதலாளித்துவத்தின் கீழ் மனித குலம்  அடைந்த ஞானத்தை மார்க்ஸ் அஸ்திவாரமாகக் கொண்டதுதான்.
இந்த அரிய கருத்தை, அற்புத கொள்கையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் வரட்டு வாதம், புனிதத்துவம் பயன்படாது. இதற்கு நுலாசிரியர் அருணன் தன் மொழியில் எப்படி விளக்கம் தருகிறார். வாசகர்கள் புரியும் படி எப்படி வியாக்கியானம் செய்கிறார் என்று பார்ப்போம். மார்க்சியம் என்கிற ஞானக் கொழுந்து பழைய வேரிலிருந்து முகிழ்ந்த்ததுதான். ஆனால், புத்தம் புதியது. அப்படியே கம்யூனிசமும் பழைய சமுதாயத்தின் வயிற்றைக் கிழித்தே வெளிக்கிளம்பும். ஆனால் புத்தம் புதியது. பழையதை காலுக்கடியில் போட்டு அதன் மீது நின்று நர்த்தனம் புரிவது. இது வரை மனித குலம் கண்ட சமுதாய ஞானம், இயற்கை ஞானம் சகலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளி கம்யூனிசத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்  – என்கிறார்.
இப்படி லெனினின் ஏராளமான கருத்துக்களுக்கு நுலாசிரியர் அருணன் எளிய முறையில் விளக்கங்கள் தந்து வாசகர்களின் வாசிப்பு வேகத்தை துரிதப்படுத்துகிறார், உற்சாகப்படுத்துகிறார்.
அவரின் எளிய நடை – ஆனால், இலக்கிய நடை சலிப்பின்றி இந்தப் புத்தத்தை படிக்கத் துண்டுகிறது. ஒரு நல்ல நாவலை உற்சாகத்தோடு படிப்பது போல, ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை – தத்துவங்களாய், கொள்கைகளாய் நிரம்பி வழிந்தோடும் ஒரு புரட்சியாளரின் வாழ்க்கையை இவ்வளவு  உற்சாகத்தோடு இடைவிடாது படிக்க முடிகிறது என்றால், தோழர் அருணனின் கை வண்ணம்தான் இதைச் சாதித்தது என்று சொல்லலாம்.
ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் லெனின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோ பாடங்களை கற்றுக் கொள்ளலாம். ரஷ்யாவில் எந்த விதமான புரட்சி நடத்த வேண்டும், மார்க்சிய தத்துவத்தை இங்கு எப்படி அமுல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு நடத்தி அதில் முழுமையாகத் தேறினார். மார்க்சிய தத்துவத்தை அப்படியே எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக அமுல்படுத்திட முடியாது என்பதில் அவர் உறுதியாக நின்றார்.
ரஷ்யாவில் ஆரம்ப நிலையில் சமூக – ஜனநாயகக்கட்சியின் நிலைபாட்டில் உள்ள சில குறைபாடுகளை அவர் குறிப்பிட்டு சொல்லுவதைப் பார்ப்போம். ரஷ்யாவில் நிலவும் சிறப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்சின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக (தங்களின் கொள்கை ஒரு வேதமல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி என்றே மார்க்சும், ஏங்கல்சும் சொல்லித் தந்திருகிறார்கள்) வேறொரு சகாப்தத்தில் வெளிநாட்டுச் சூழல்களில் அமுல்படுத்தப்பட்ட அனுபவத்திலிருந்து கிடைத்த முடிவுகளை விமர்சன பூர்வமற்ற முறையில் அப்படியே இங்கே எதிரொலித்தார்கள்.
ரஷ்யாவில் முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படை விவசாயப் புரட்சியே, அதுவே இந்தப் புரட்சியின் குறிப்பான தேசியத் தன்மையைத் தீர்மானிக்கிறது. இந்தப் பிரச்சனையின் சாரம் நிலப்பிரபுத்துவத்தையும், ரஷ்ய விவசாய முறையிலும் அதன் விளைவாக சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களிலும் நிலவும் பண்ணை அடிமைத்தனத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழிக்க விவசாயிகள் நடத்தும் போராட்டமே.
இந்தியாவிலேயும் மார்க்சிய தத்துவத்தை அமுல்படுத்துகிற போது, உலகமயம், தாரளமய, தனியார்மயம் என புதிய சூழல் இந்தியாவை கவ்வியுள்ளபோது, ஏகாதிபத்திய நாடுகளின் இந்த புதுவித தாக்குதல்களையும் எதிர்த்துக்கொண்டு, உள்நாட்டு முதலாளிகளும் பன்பமடங்கு தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு இந்திய மக்களை சாடுகின்ற சூழலில், கிராமங்களிலும் முதலாளித்துவ நிலச்சுவான்தார்கள் உருவாகிவிட்ட சூழலில், கிராம மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிற போது, அன்னிய மூலதனமும், விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுக்கிற சூழ்நிலையில், இதற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிற பாடத்தையும் நாம் புரிய வேண்டும்.
மார்க்சியத்தை நன்கு கற்றுத் தேர்ந்த லெனின், தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று என்றும் இருந்ததே இல்லை. மிக அடக்கத்தோடு சாதாரண, ஏழை எளிய மக்களிடம் கூட அவர் கேட்டு தெரிந்து கொண்டு அவர் தன் ஞானத்தை கூர்மைப்படுத்திக் கொண்டார். ஞானத்திமிர் அவருக்கு இருந்ததே இல்லை. இதற்கும் ஓர் உதாரணம் :-
ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர் – ஆல்பெர்ட் ரைஸ் வில்லியம்ஸ் என்பவர் லெனினை பேட்டி காணச் சென்றார். 1 1/2 மணி நேரம் ஆகியும் லெனின் இவரைக் கூப்பிட வில்லை. நேரம் அதிகமாகிவிட்டது. அமெரிக்க பத்திரிக்கையாளர் நினைத்தது:-
லெனின் நேரத்தைக் கடை பிடிப்பவர். ஆனால், ஏன் என்னைக் குறித்த நேரத்தில் அழைக்கவில்லை. ஒருவேளை வெளிநாட்டு துதுவர் பேசிக் கொண்டிருக்கிறார் போலும் என நினைத்துக் கொண்டார். ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு கிராம விவசாயி பரட்டைத்தலை அரைகோட்டு அணிந்தவர் லெனின் அறையிலிருந்து வெளியே வந்தார். அவரை அடுத்து அமெரிக்க பத்திரிக்கையாளர் உள்ளே சென்றார். அவரிடம் லெனின் சொன்னது :
மன்னித்துக் கொள்ளுங்கள். இவர் தம்போவ் விவசாயி. மின்மயமாக்கல், கூட்டுப் பண்ணைகள் அமைத்தல், பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு பேசுவது சுவாரசியமாக இருந்ததால் நேரத்தை கவனிக்க மறந்து விட்டேன் என்றார். அவருக்கிருந்த மேதாவிலாசம், ஏழை விவசாயியோடும் பொருளாதாரம் பேச அதிலும், அக்கறையோடு பேச பணித்தது.
பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் கமிட்டி கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார்கள். காலத்தை வீணடிப்பார்கள் என்று மற்றவர்கள் கூறுவது வழக்கம், நமக்குள்ளாகவே பேசுவதும் வழக்கம்.
இப்படி தோழர் லெனினுக்கும் ஒரு சோதனை ஏற்பட்டது:
ரஷ்ய கவிஞர் மாயகோவ்ஸ்கி விடாமல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்போர் என்ற தலைப்பில் அன்றைய ரஷ்ய புரட்சியாளர்களிடமும், குறிப்பாக போல்ஸ்விக் கட்சியினரிடமும் மலிந்திருந்த ஒரு பழக்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதியிருந்தார்.  இந்தக் கவிதையை லெனின் படித்திருக்கிறார். சினம் கொள்ள வில்லை. மாறாக மகிழ்ந்தார். அவர் ஒரு   ஞசயஉவஉயட ஞநசளடியேடவைல. ஆக இதில் அவர் அணுகுமுறையைப் பார்ப்போம்.
மாயகோவஸ்கியின் கவித்துவ ஆற்றலின் ரசிகனல்ல நான் – அது பற்றி தீர்ப்பு சொல்ல நான் தகுதி படைத்தவன் அல்ல. என்றபோதிலும், இந்த கவிதையைப் படித்து நான் ரசித்தது போல அண்மைக்காலத்தில் வேறு எந்த அரசியல் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்டதைப் ரசித்ததில்லை. தனது கவிதையில் அவர் இந்தக் கூட்டம் நடத்தும் பழக்கத்தை விமர்சித்திருக்கிறார். கூட்டங்களில் விடாமல் உட்கார்ந்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை அவர் ஒரு பிடி பிடித்திருக்கிறார் – கவிதை பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், அத அரசியலைப் பொறுத்த வரையில் முற்றிலும் சரிதான் என்பேன். கூட்டங்களில் மனிதர்கள் முடிவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். குழுக்களைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். முடிவற்ற திட்டங்களைத் தீட்டிய வண்ணம் இருக்கிறார்கள் – என்றார்.
கமிட்டி கூட்டங்கள் பிரசங்க மேடையாகிவிடுவதை, செயல்பட வேண்டிய நேரத்தைக் குறைத்துவிட்டு, கமிட்டி கூட்டங்களை மணிக்கணக்கில் நடத்துவதை லெனின் குறை கூறுகிறார். மாயகோவ்ஸ்கியின் அந்த கிண்டல் கவிதை வரிகளை ஏற்கிறார். கவிஞர் சொன்னதை மறுக்கவில்லை. மறைக்கவில்லை. மாறாக, அதை வெகுவாக ரசித்தேன் என்கிறார். இதுதான் லெனின் சிறப்பு.
இன்னும் அவரின் குணமேன்மையை அறிய ஓர் உதாரணம்: நான் ஒரு நுலில் படித்த ஒரு அரிய செய்தி.
லெனின் பாரிசில் குடியேறி வாழ்ந்த காலத்தில், அவர் வீட்டில் ஒரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாது பணியாளராக இருந்தார். அவர் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தப்பாட்டைக் கேட்ட லெனின் மிக ஆர்வத்தோடு, மீண்டும் ஒருமுறை அந்தப் பாட்டைப் பாடச் சொல்லி கேட்டு அவர் மனப்பாடம் செய்து கொண்டார். தலை சிறந்த அறிவாளி – எனவே ஒரு வீட்டு வேலைக்காரி பாடிய பாட்டை மீண்டும் பாடக் கேட்டு, அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு, இவர் பாட ஆரம்பித்து விட்டார். இவர் பாடுவதா? இங்கே தான் அவரின் மகத்தான பெருமை பளிச்சிடுகிறது. யார் பாடினால் என்ன? அந்தப்பாடலில் பொருள் இருந்தால் சரி, அது நமக்கும் பயன்படும் என்பதை ஏற்றுக் கொண்டார். உழைப்பாளி மக்களின் தலைவருக்கு நான் என்னும் முனைப்பு (நுபடி) தலை துக்கக்கூடாது அல்லவா? அதுதான்இது. சரி, அந்தப் பாடலில் அப்படி என்னதான் பொருள் இருந்தது?
அந்தப் பணியாளர் பாடியது தாய்நாட்டைப் பற்றிய பாடல், ஜெர்மன் ஆதிக்கத்தை எதிர்த்து, அந்த உழைப்பாளிப் பெண் வீரத்தோடு பாடிய பாடல்.
ஓ ஜெர்மானியர்களே, நீங்கள் எங்களின் ஆஸ்சேஸ், லோரன் பகுதிகளைப் பிடித்துக் கொண்டுட்டீர்கள். எனினும், உங்களையும், மீறி சுயமான பிரஞ்சுக்காரர்களாகவே வாழ்வோம். எங்களுடைய வயல்களை எல்லாம் உங்கள் வசம் ஆக்கிக் கொண்டீர்கள். ஆனாலும், எங்களுடைய இதயங்கள் உங்களுக்கு எப்போதும் கிடைக்காது- என்ற தாய் நாட்டுப் பற்றிக் கூறும் வீரமான பாடல். இதைக் கேட்டுத்தான் லெனின் பரவசமானார். மனப்பாடம் செய்து அவரும் பாடினார்.
தேசிய இனப்பிரச்சனையில் லெனின் மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் பூரணமாக சமநிலை கொண்டு செயல்பட்டார்.
சோவியத் குடியரசுகளின் ஒருங்கிணைப்பில் சிறிய நாடோ, பெரிய நாடோ யாவற்றிற்கும் சம உரிமை பரிபாலிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இங்கே இந்திய ஆட்சியாளர்களுக்கு இந்த உணர்வு இருக்க முடியாது. முதலாளித்துவ ஆளுமைக் கொள்கை அதற்கு இடம் கொடுக்காது.
இது சம்பந்தமாக பரிசீலனை செய்ய ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையில் ஒரு தவறு இருந்தது. அதை லெனின் ஏற்கவில்லை.
ரஷ்யா உள்ளிட்ட அனைத்து குடியரசுகளும் சமநிலையில் இணைந்து ஒன்றியம் உருவாக்கப்படுதல் என்பதற்கு பதிலாக ரஷ்யாவின் தலைமையை இதர குடியரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்ற பொருள்பட அந்தப்பரிந்துரை இருந்தது.
இதைக்கண்ட லெனின் ஸ்டாலினை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.
நுலாசிரியர் அருணன் இந்த நுண்ணிய பிரச்சனையில், லெனின் எந்த உணர்வோடு எழுதினாரோ, அதே அர்த்தத்தில் பொருள் கெடாமல் மொழி பெயர்த்துள்ளார். லெனின் கூறுவது:-
உரோனிய குடியரசு மற்றும் இதரர்களோடு நம்மையும் நாம் சமமாகப் பாவிக்கிறோம். பிறருடன், பிறருக்கு சமமாக நாமும் (ரஷ்யாவும்) புதிய ஒன்றியத்தில், புதிய சம்மேளனத்தில் சேருகிறோம்.
ரஷ்யர்களிடம் பெரிய அண்ணன் போக்கு வந்து விடக் கூடாது என்பதில் லெனின் கறாராக இருந்தார். மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்:
ஆதிக்க தேச இனவாதத்திற்கு எதிராகச் சாகும் வரை போராடுவேன் என்று அறிவிக்கிறேன். இந்த சொத்தைப் பல்லைப் பிடுங்கிவிட்டு எனது நல்ல பற்களை வைத்தே உண்பேன். ரஷ்யர், உக்ரேனியர், ஜார்ஜியா இப்படி முன்வைத்தே ஒன்றியத்தின் மத்தியக்குழுவிற்கு தலைவர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டியது முற்றிலும் அவசியமாகும். முற்றிலும் – என்கிறார்.
எத்தகைய மகத்தான ஜனநாயகவாதியாக, பேரினவாதத்திற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காத சமத்துவாதியாக லெனின் திகழ்ந்தார் என்பதற்கு இது அழியா சாட்சியமாகும். ஒன்றியத்தின் தலைவராக ஒரு இனத்தைச் சேர்ந்தவரே வந்து விடக் கூடாது. மக்கள் தொகையில் மிக அதிகமானவர்கள்தான் வருவார்கள். எனவே, சுழற்சி முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறார் – என நுலாசிரியர் அருணன் கூடுதல் விளக்கம் கொடுத்து வாசகர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார்.
இப்படியெல்லாம் லெனின் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் அந்த மகத்தான அமைப்பு – சோவியத் சோசியலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கம்பீரமாக உருவானது.
தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது மிக நுணுக்கமான ஏற்பாடு. இதை லெனின் மிகத் திறமையாக வகுத்தார். ஒரு தனி புத்தகமும் எழுதினார்.
தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது – இந்த பிரிந்து போகும் உரிமை என்பது ஆமாம், இல்லை என்று சொல்லுவது நடைமுறையில் மிக எளிதாக இருக்கலாம். ஆனால், பாட்டாளிகளைப் பொறுத்த வரையில் இந்தக் கோரிக்கை வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டவை. அதாவது தேசங்களது உரிமைகளுக்குமிடையே முழு சமத்துவம் வேண்டும், அனைத்து தேசங்களது தொழிலாளர்களின் ஒற்றுமையும் வேண்டும். இதுவே மார்க்சியத்தின் தேசியத்திட்டம். அனைத்துலக அனுபவமும், ரஷ்ய அனுபவமும்  இதையே தொழிலாளர்களுக்குப் போதிக்கிறது என்றார்.
இந்த மூன்று கூறுகளில் எந்த ஒன்யும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார்.
சுயநிர்ணய உரிமை என்பது கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக முன்வைக்கப்பட்டு, திட்டவட்டமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றார். இதில் லெனின் அதிக பட்ச எச்சரிக்கையோடு இருந்தார்.
லெனின் மொழிப்பிரச்சனைக் கொள்கை இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும். இந்தியாவில் மத்திய அரசு – ஆளும் வர்க்கம் மொழிக் கொள்கையில் பெரிய தவறு செய்து வருகிறது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை – இந்தியக் கட்டாயப்படுத்தி, பிற மாநில மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டது.
லெனின் சோவியத் குடியரசில், அந்தந்த குடியரசின் தாய்மொழி எதுவோ, அதுதான் நிர்வாக மொழியாக, போதனா மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யர்கள் பெரும்பான்மையராக இருப்பதால், ரஷ்ய மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றார். எந்த ரூபத்திலும் இது கட்டாயமாக்கப்படக்கூடாது என்றார். அவர் ஒரு ரஷ்யர் ஆனால், பேரினவாதத்தை அறவே வெறுத்தார். மொழி விசயத்தில் மிகத் தெளிவான கொள்கை கொண்டிருந்தார். எந்த தேசிய இனமும் இதில் அதிருப்தி அடைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். லெனின் தன் இளமைப் பருவத்திலிருந்தே புரட்சி என்றால் அது தனிநபர் கொலை என்கிற சித்தாந்தத்தை அறவே வெறுத்தார். எதிர்த்தார். தன் மூத்த சகோதரர் அந்த நிலைபாட்டை எடுத்தவர், தண்டனையாக துக்கு மேடைக்குப் போனவர். இந்த அனுபவம் லெனினுக்கு உண்டு. கம்யூனிஸ்ட இயக்கத்தில் அதிதீவிரவாதம் என்பது ஒரு நோயாக தொடர்ந்து வந்திருக்கிறது. சர்வதேச ரீதியில் ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து போன்ற நாடுகளில் அதிதீவிரவாதம் தலை துக்கியது. அந்த நாடுகளில் உள்ள அதிதீவிரவாதிகள் ரஷ்யாவில் நடந்த புரட்சியை  அவர்களுக்கு சாதகமாகத் திரித்துத் தங்கள் சொந்த நாட்டில் பிரச்சாரம் செய்தார்கள். இந்தியாவில் உள்ள அதிதீவிரவாதிகள் சீனப் புரட்சியை இந்தியாவில் தவறாக ஒத்திடுவது போல.
இந்த அதிதீவிரப் போக்கை  எதிர்த்து இடதுசாரி கம்யூனிஸ்ட்டும் –  ஓர் இளம் பருவக் கோளாறும் என்ற நுல் எழுதி இடதுசாரி தீவிரவாதிகளின் தவறான போக்குகளைத் தோல் உரித்துக்காட்டினார்.
லெனின் அவ்வப்போது வரும் நாவல்களை, தத்துவார்த்த நுல்களை, அரசியல் சார்ந்த ஏடுகளை, கவிதைகளை விடாப்பிடியாக படிக்கும் திறமையுள்ளவர்: அவர் வேகமாக படிக்கும் இயல்புள்ளவர் என்றும் கூறுவார்கள். 400 பக்கங்கள் கொண்ட புத்தகமானாலும் ஒரே இரவில் படித்து முடித்து விட்டாராம். வெளியாகும் புத்தகங்களை உடனுக்குடன் படிக்கும் ஆர்வமுள்ளவர் என்பதற்கு ஒரு சுவையான நிகழ்வை நுலாசிரியர் அருணன் குறிப்பிடுகிறார்.
இந்தியப் புரட்சியாளர்களில் சிலர் குழுவாகச் சென்று லெனினைச் சந்தித்திருக்கிறார்கள்.
எம்.பி.ப.தி. ஆச்சாரியா, நாளு மகேந்திர பிரதாப், எம்.பர்கத் துல்லா, அப்துல்ராய், திலிப் சிங்கில், இப்ராகிம் ஆகியோர் சந்தித்துள்ளார்கள். இந்தச் சந்திப்பு கிரெம்ளினில் நடந்துள்ளது. எம்.பி.ப.தி. ஆச்சாரியா அதாவது மண்டையம் பிரதிவாதி பயங்கர திருமலை ஆச்சாரியா தமிழகத்தைச் சார்ந்தவர். சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். தமிழர். இவரின் குடும்பத்தார்தான் இந்தியா பத்திரிக்கைக்கு பாரதியாரை ஆசிரியர் ஆக ஆக்கியவர்கள்.
இந்தக்குழுவின் தலைவராகச் சென்ற மகேந்திர பிரதாப் லெனின் அறைக்குள் சென்றவுடன், லெனினே எழுந்து மூலையில் இருந்த நாற்காலி ஒன்றை எடுத்து வந்து அவருக்குப் போட்டது பெரிய ஆச்சரியமாகிப் போனது.
மகேந்திர பிரதாப்புக்கு மேலும் ஓர் ஆச்சர்யம் காத்துக் கிடந்தது. இவர் எழுதிய அன்புமதம் என்ற புத்தகத்தை லெனினிடம் வழங்கினார். உடனே லெனின் நான் அதை ஏற்கனவே படித்து முடித்துவிட்டேன் என்றார்.
அதோடு அந்தப் புத்தகம் பற்றிய தன் அபிப்பிராயத்தையும் அவரிடம் சொன்னார்.
எங்கள் நாட்டில் கூட டால்ஸ்டாய் போன்றவர்கள் மதத்தைப் பரப்புவதின் மூலம் மக்களது விடுதலைக்கு வழி காணலாம் என நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்கவில்லை. இந்தியா திரும்பிய பிறகு நீங்கள் வர்க்கப் போராட்டத்தை பிரச்சாரம் செய்யுங்கள். அதுதான் விடுதலைக்காண வழி – என்று சொல்லியனுப்பினார்.
டால்ஸ்டாய் மதப்பிரச்சாரத்தின் மூலம் விடுதலை பெற முடியும்- என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன லெனின் டால்ஸ்டாய் பற்றி பொதுவாக என்ன கணிப்பு கொண்டிருந்தார் என்பது மிகத் தலைசிறந்த மதிப்பீடு.
எப்பேர்பட்ட மலை (டால்ஸ்டாய்). ஊம். எத்தகைய மாண்பு மிக்க மனிதர். கலைஞர் என்றால் நண்பரே, இவர்தான் கலைஞர். இன்னும் ஆச்சரியம் என்ன தெரியுமா? இந்தப் பிரபு எழுதத் தொடங்கும் முன் உண்மையான ரஷ்யக் குடியானவன் இலக்கியத்தில் இடம் பெறவில்லை…
ஐரோப்பாவில் இவருக்கு இணையக யாரைச் சொல்ல முடியும். ஒருவரையும் சொல்ல முடியாது – இப்படி கார்க்கியிடம்தான் டால்ஸ்டாய் பற்றி லெனின் பேசினார்.
அதே நேரத்தில் அவருடைய திறமைகள் அனைத்தையும் பாராட்டிய லெனின் அவரிடம் உள்ள குறைபாடுகளையும் கறாராகவே சுட்டிக்காட்டினார்.
டால்டாய் ஆவேசமான கண்டனக்காரர். உணர்ச்சிமிகு குற்றச்சாட்டாளர். மாபெரும் விமர்சகர். அதேபொழுதில் தமது நுல்களில் சுரண்டலுக்கான காரணங்களையும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியோடு, லெனின் மிக நெருக்கமாக இருந்தவர். அவருடைய படைப்புகளை விரும்பி படிக்கிறவர். ஆனால், அவரின் படைப்பில் அரசியல் தவறுகள் ஏற்பட்டு விட்டால் அவைகளையும் கட்டாயம் விமர்சனம் செய்யாமல் விடமாட்டார்; நட்பையும் விடமாட்டார்.
அவர் எழுதிய நுலைப் படித்துவிட்டு உடனே அவருக்குக் கடிதம் எழுதிவிடுவார்; நல்லவைகளைப் போற்றுவார். அல்லவைகளைச் சாடுவார். இருவரும் நேரில் சந்திக்கிறபோது நிறைய விவாதிப்பார்கள்.
எவ்வளவு அரசியல் பணிகளில் இருந்தாலும், படைப்பாளிகளோடு தொடர்பு கொள்ளுவதை விடாது கடைபிடித்தார்.
லெனின் ஓர் இலக்கிய ரசிகர். இலக்கிய விமர்சகர். இலக்கியம் பற்றிய கலையைப்பற்றிய  லெனின் கொள்கை மிகத் தெளிவானது.
கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப்பதிந்திருக்க  வேண்டும். அது அவர்களுக்கு புரியக் கூடியதாய் இருக்க வேண்டும். எந்த நேரமும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளி விவசாயிக்கு சாதாரண கறுப்பு ரொட்டி அவசர தேவையாய் இருக்கிற போது, சொற்ப சிறுபான்மை யோருக்கு அருஞ்சுவை விருந்து தயாரிக்க முடியுமா? இது கலை பண்பாட்டுத்துறைக்கும் பொருந்தும்- என்றார்.
உண்மைதான். கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதன் மெய்யான அர்த்தத்தில் லெனின் பேசினார். டால்டாய் வெறுத்த பழைய உலகினை அழிக்கும் ஆற்றல் படைத்த வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்பதை அதே டால்ஸ்டாய் புரிந்து கொள்ளவில்லை என்றார்.
எழுத்தாளர்களை, கலைஞர்களை ஒரு கம்யூனிட் எப்படிப்பார்க்க வேண்டும்; கட்சிக்கு அப்பாற்பட்ட கலைஞர்களை, அதே நேரத்தில் கட்சிக் கலைஞர்களை எடைபோடும் அளவுகோல் எது என்பது பற்றியெல்லாம் புரிந்து கொள்ள லெனினுடைய நேர்த்தியான அணுகுமுறையை படைப்பாளி அருணன் நிறைய இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.
மாதர் விடுதலை பற்றி ஜெர்மன் கம்யூனிட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான, புரட்சிப் பெண்மணி கிளாரா செத்கின் என்பவருடன் லெனின் நடத்திய விவாதம் அற்புதமான ஒன்று! அந்தப் பகுதியை நுலாசிரியர் அருணன் சிறப்பாகவே எடுத்துக் காட்டியுள்ளார். அவரின் கருத்து பெண் விடுதலை வேட்கைக் கொண்டோருக்கு வெளிச்சம் காட்டுகிறது.
கிளாராவிடம் லெனின் ஒரு கட்டத்தில் கீழ்க்கண்ட கருத்தை அழுத்தமாகச் சொல்லுகிறார்.
மார்க்சியத்துக்குப் புறம்பான முறையில் விவாதிப்பதால் முடிவில் ஏற்படக் கூடிய நிலை என்ன? பாலுறுவு – திருமணப் பிரச்சனைகள் யாவும் பிரதான சமுதாயப் பிரச்சனைகளைச் சேர்ந்த கூறுகளே என்பதை மாற்றக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மாபெரும் சமுதாயப் பிரச்சனையே பாலுறவுப் பிரச்சனையின் ஒரு கூறாக, அதன் வாலாகக் கருதப்படும் – என்கிறார்.
இப்படிப் பெண்கள் உரிமைப்பற்றி பல முக்கியமான கூறுகளை பல கோணங்களில் விளக்கிப் பேசுகிறார்.
கம்யூனிடுகள் கனவு காண்பார்கள் என்பதே உண்மை. அது யதார்த்தத்திலிருந்து உதயமாகிற கனவு.
ஆங்கில எழுத்தாளர் எச்.ஜி. வெல் – விஞ்ஞான கற்பனைக்கதைகளை எழுதியவர். இவர் 1920 ஆம் ஆண்டு லெனினைச் சந்தித்தார். அப்போது லெனின் ரஷ்யா முழுவதும் மின்சாரமயமாகும் திட்டத்தை அவரிடம் சொன்னார்.
எச்.ஜி.வெல் அன்று ரஷ்யா இருந்த பின்தங்கிய நிலையைக்கண்டு, லெனின் முடியாத விசயத்தை கனவு காண்கிறார் என்று சொன்னார், எழுதினார். இதை ஆசிரியர் அருணன் சுட்டிக்காட்டி ரஷ்யக் கிராம மக்கள் லெனின் விளக்குகள் என்று கொண்டாடியதைக் கேள்விப்பட்டிருந்தால் கனவு-மின்சாரக்கனவு-காண வேண்டியதன் அவசியத்தை எச்.இ.வெனி உணர்ந்திருப்பார் என்று எழுதுகிறார். ஆனால் வரலாறு அப்படித்தான் நடந்து விட்டது. ஒருபத்தாண்டுகள் கழித்து அதே எழுத்தாளர் எச்.இ.வெல் ரஷ்யா வந்தார். ரஷ்யாவை சுற்றிப்பார்க்க பல இடங்களுக்குப் பயணம் செய்தார். அதன் பிரமாண்டமான வளர்ச்சியைக்கண்டு ஆச்சரியப்படார். லெனின் கனவு மெய்பட்டுவிட்டது – என்று தன் நினைவுக்குறிப்பில் எழுத வேண்டியதாயிற்று, ஆனால் அதுபோது லெனின் இல்லை. மரித்துப்போனார்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் தங்களோடு கருத்து வேறுபாடு கொள்ளுகிற மற்ற சக தோழர்களிடம் எப்படி தோழமை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் லெனின் வாழ்க்கை ஒரு பெரிய எடுத்துக்காட்டு.
டிராட்ஸ்கி, புகாரின், மார்ட்டோவ், காமனோவ், ஹினோஜீவ் போன்றோர் லெனினோடு கருத்து மோதல் நடத்தினார்கள். முடிவுக்கு மாறாக செயல்பட்டார்கள். காட்டியும் கொடுத்தார்கள். அப்படி இருந்தும் அவரவருக்கு இருந்த சில திறமைகளைக் கணக்கில் கொண்டு, அதோடு திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களை வழங்கினார். முக்கிய பொறுப்புக்களையும் கொடுத்தார். இப்படிப் பட்டவர்களில் சிலர் கடைசி வரை திருந்தாமல் போனவர்களும் உண்டு.
லெனின் கட்சித் தலைவர்கள் பற்றி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்த பிறகு தான் அதை கட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த உயில் சில தலைவர்களின் குணாம்சம் பற்றி எழுதி இருந்தாலும், ஸ்டாலின் பற்றி எழுதியது தான் பெரும் பிரச்சனையாகிவிட்டது. தனிநபர் துதி எங்கு கொண்டு போய்விடும் என்பதை உணர வைத்த இந்த குறிப்புகள் இன்று வரலாற்று ஆவணமாக நம்மை எச்சரிக்கிறது.
லெனின் மறைவு பற்றி எழுதும் கடைசி அத்தியாயத்திற்கு அருணன் அவர் காலம் ஆனார் என தலைப்புக் கொடுத்துள்ளார். அவர் காலமாகிவிட்டார் என்பது வேறு. அவர் காலம் ஆனார் என்று பிரித்து எழுதுவதில் ஒரு பொருள் அடங்கி உள்ளது. அவர் ஒரு சகாப்தம் (EPOCH) ஆனார் என்பது போல் அவர் ஒரு காலம் ஆனார் என்ற பொருளில் எழுதுகிறார்.
கடைசி அத்தியாயம், கடைசி பத்தி
அவர் காலமாகவில்லை; காலம் ஆனார். வால்கா எனும் ஜீவ நதியின் ஓட்டத்தில் அவர் கலந்து நிற்கிறார். உலகத்தின் ஜீவநதிகளோ கம்யூனிசம் எனும் மகா சமுத்திரத்தில் கலக்க ஓடிய வண்ணம் உள்ளன – என்று முடிக்கிறார்.
லெனின் என்கிற அந்தச்சொல், அந்த ஒலி – ஒரு காந்த சக்தி கொண்டது. ஒரு ஈர்ப்பு சக்தி கொண்டது. ரஷ்ய மக்கள் மட்டுமல்ல, சோவியத் ஒன்றயத்தில் இணைந்த அத்தனை குடியரசுகளைச் சேர்ந்த மக்களும் லெனின் என்ற ஒலியைக் கேட்கிற வினாடியிலேயே ஒருவித ஆக்ரஷ்ன சக்தியால் உசிப்பிவிடப்பட்டு நிமிர்ந்து எழுவார்கள். லெனின் என்ற சொல் கோடானு கோடி மக்கள் தினமும் உச்சரிக்கும் சொல்லாக மாறிப்போனது. அது சோவியத் யூனியன் எல்லையைக்கடந்து உலகம் பூராவும் உள்ள உழைப்பாளி மக்களின் உள்ளத்தை ஆட்சி கொண்டது.
அவரின் இயற்பெயர் விளாதிமிர் இலியாவிச் உல்யனவ் என்பது. விளாதிமிர் என்பதற்குப் பொருள் உலகு ஆள்பவர் என்பதாம். உலக மக்களின் உள்ளத்தை – அதிலும் உழைப்பாளி மக்களின் உள்ளத்தை லெனின் என்ற பெயரில் இன்னும் ஆளுகிறார். இனியும் ஆளுவார்.
லெனின் வாழ்வும் – சிந்தனையும்

No comments:

Post a Comment